மணப்பாறை பேருந்து நிலையத்தில் அரசின் அசோக சின்ன முத்திரையுடன் காவலர் தொப்பி ஒன்று குப்பையில் கிடந்தது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்துநிலையத்தில் நேற்று இரவு நகராட்சி தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியினை மேற்கொண்டு இருந்தனர். அப்போது பாலக்குறிச்சி பேருந்துகள் நிறுத்தும் பகுதியில் இருந்த குப்பைகளுக்கிடையே காவலர் ஒருவரின் தொப்பி, அரசின் அசோக சின்ன முத்திரையுடன் கிடந்துள்ளது. இதைக்கண்ட பேருந்து நிலைய வணிகர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையும் படிக்க- ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்வு
தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அது ஒரு தலைமை காவலர் பதவியில் உள்ள காவலர்கள் அணியும் தொப்பி என்பது தெரியவந்தது. மேலும் தலைமை காவலர் ஒருவரின் பயன்படுத்திய தொப்பி தான் என்பதும், புதிய தொப்பி வாங்கியதால் இதை குப்பையில் போட்டுயிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
பயன்படுத்தி சேதமடைந்த தொப்பியாக இருந்தாலும் அதை ஒரு தலைமை காவலர் பதவியில் உள்ளவர் பலரும் காணும் வகையில் குப்பையில் வீசியதும், அதுவும் அரசின் அசோக சின்ன முத்திரையுடன் வீசி சென்றதும் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.