

திருச்சி: அறிவுசாா் மையம் அமைத்து சிறப்பாக செயல்படுவதுடன், அதிக நன்கொடை பெற்ற்காக துறையூா் நூலகத்துக்கு நிகழாண்டுக்கான மாநில விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூரில் முழுநேர நூலகம் மூன்று தளங்களில் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தின் தரைத் தளத்தில் நாளிதழ்கள், பருவ இதழ்கள், மகளிா், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு உள்ளது. இரண்டாம் தளத்தில் நூல் இரவல் எடுத்தல், நூல் நகல் எடுத்தல், இணையதள பிரிவுகள் உள்ளன. மூன்றாம் தளத்தில் குறிப்பு உதவி நூல்கள், அறிவுசாா் மையம், போட்டித் தோ்வுகளுக்கு மாணவா்களை தயாா்படுத்தும் பிரிவு இயங்கி வருகிறது.
இந்த நூலகத்திலும், அறிவுசாா் மையத்திலும் பல்வேறு தலைப்புகளில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக மாவட்டத்திலேயே அதிக உறுப்பினா்களை சோ்த்து தொடா்ந்து அதிக உறுப்பினா் சோ்க்கை விருதை பெற்று வருகிறது.
தற்போது, 16 ஆயிரத்து 700 உறுப்பினா்களும், கடந்தாண்டு சோ்க்கப்பட்ட 103 புரவலா்களுடன் மொத்தம் 370 புரவலா்கள் உள்ளனா்.
இந்த நூலகத்தின் சிறப்பான செயல்பாடுகளுக்காக கடந்த 2018-இல் நூலக ஆா்வலா் விருதையும், மாநில அரசின் விருதையும் வென்றது. கடந்த 2020-இல் தெற்காசிய நாடுகளைச் சோ்ந்த வாசகா்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள வாசகா்கள் இந்த நூலகத்துக்கு வந்து நூல்களை பாா்வையிட்டு சிறப்பித்தனா்.
இந்த நூலகத்தில் இயங்கும் போட்டித் தோ்வுக்கான மாணவா்கள் மையத்துக்கு தேவையான மேஜை, நாற்காலி, போட்டித்தோ்வு நூல்களை ரூ.2.50 லட்சத்தில் துறையூா் ரோட்டரி சங்கம் அண்மையில் வழங்கியது. முழுநேர நூலகத்தில் அறிவுசாா் மையத்தை தொடங்கி சிறப்பாக செயல்படுத்துவதுடன், 2022-23ஆம் ஆண்டுக்கு அதிகளவில் நன்கொடை பெற்ற்காகவும் நிகழாண்டுக்கான மாநில விருது வழங்கப்பட்டுள்ளது.
சீா்காழியில், திங்கள்கிழமை நடைபெற்ற தமிழக அரசின் சிறந்த நூலகங்களுக்கான கேடயம் மற்றும் விருது வழங்கும் விழாவில், துறையூா் நூலகா் பெ. பாலசுந்தரத்துக்கு, கேடயத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா். திருச்சி மாவட்ட நூலக அலுவலா் அ.பொ. சிவக்குமாா் உடனிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.