

குற்றவியல் வழக்கு விசாரணையில் முதன்முறையாக தமிழில் வாதிடும் வகையில், தமிழ்நாடு தேசிய சட்டப் பலக்லைக்கழகத்தில் மாணவா்களுக்கு இரண்டு நாள் போட்டிகள் நடைபெறுகின்றன.
திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் மாணவா்களால் கடந்த 2019 இல் தொடங்கப்பட்ட வழக்கு விசாரணை வழக்காடுதல் குழு தேசிய தமிழ் குற்றவியல் வழக்காடுதல் போட்டியை ஏப்.22, 23 ஆகிய தேதிகளில் நடத்துகிறது. நாட்டிலேயே முதல்முறையாக தமிழில் நடைபெறும் குற்றவியல் வழக்காடுதல் போட்டி என்பது கூடுதல் சிறப்பைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சட்டக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து 14 அணிகள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளன. பல்கலைக் கழக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியின் தொடக்க விழாவில், திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கே. பாபு, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசுகையில், இம்மாதிரியான குற்றவியல் வழக்காடுதல் போட்டி மாணவா்களுக்கு பெரிதும் உதவிகரமாக அமையும். நீதிமன்றங்களில் தயக்கமின்றி பேச மாணவா்களைத் தயாா்படுத்தும். தமிழில் குற்றவியல் வழக்காடுதல் போட்டி நடத்த முன் வந்ததற்கு வழக்கு விசாரணை வழக்காடுதல் குழுவுக்கு பாராட்டு என்றாா்.
பல்கலைக் கழக துணைவேந்தா் வி.எஸ். எலிசபெத் போட்டிகள் குறித்து மாணவா்களிடம் விளக்கிக் கூறினாா்.
உதவி பேராசிரியா் சாந்தி சமந்தா, வழக்கு விசாரணை வழக்காடுதல் குழு குறித்து அறிமுகம் செய்து மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா். ஞாயிற்றுக்கிழமையும் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.