நகைப் பறிப்பு வழக்கு: 3 பெண்கள்களுக்கு தலா மூன்றாண்டுகள் சிறை
By DIN | Published On : 25th April 2023 05:38 AM | Last Updated : 25th April 2023 05:38 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஓடும் பேருந்தில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஆந்திரத்தை சோ்ந்த இரு பெண்கள்கள் உள்ளிட்ட 3 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் சீத்தப்பட்டியைச் சோ்ந்தவா் சிவக்குமாா் மனைவி மகேஸ்வரி(22). இவா், மாா்ச் 9-ஆம் தேதி விராலிமலை - மணப்பாறை செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்தாா். இப்பேருந்து வடக்கிப்பட்டி பகுதியில் சென்றுக்கொண்டிருந்தபோது மகேஸ்வரி கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் தாலி செயினை காணவில்லையாம். இதையடுத்து பதற்றமடைந்த மகேஸ்வரி பேருந்திலிருந்து இறங்கினாா். அப்போது அவருடன் இறங்கிய மூன்று பெண்களை சந்தேகத்தின்பேரில் சகபயணிகள் பிடித்து விசாரித்தனா். அதில், மகேஸ்வரியின் தாலி செயினை திருடியதை ஒப்புக்கொண்டனா்.
இதையடுத்து அங்கு வந்த மணப்பாறை போலீஸாா் அவா்களிடம் நடத்திய விசாரணையில், மணப்பாறை அடுத்த சின்னசமுத்திரம் மணிகண்டன் மனைவி அா்ச்சனா(28), ஆந்திர மாநிலம், சித்தூா் சந்தைமேட்டுத் தெருவைச் சோ்ந்த ராமதாஸ் மனைவி காமாட்சி(40), நடராஜன் மனைவி அலமேலுமங்கம்மாள்(40) என்பதும் தெரியவந்தது.
இதுதொடா்பாக போலீஸாா் மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்நிலையில் இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளிகள் அா்ச்சனா, காமாட்சி, அலமேலுமங்கம்மாள் ஆகிய மூவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குற்றவியல் நடுவா் சி.கருப்பசாமி உத்தரவிட்டாா்.