திருச்சி திருவெறும்பூா் பகுதி தேவாலயத் தோ் பவனியின்போது ரெளடிகள் உள்ளிட்ட 4 பேரை அரிவாளால் வெட்டியது தொடா்பாக இருவரை போலீஸாா் பிடித்து விசாரிக்கின்றனா்.
திருவெறும்பூா் அருகே மேலகுமரேசபுரத்திலுள்ள புனித சகாய அன்னை தேவாலய 39 ஆம் ஆண்டு திருத்தோ் பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழா தொடங்கியது முதலே அவ்வப்போது சிறு சிறு தகராறுகள் ஏற்பட்டன. ஞாயிறு அதிகாலை வேளையில் அசோக்நகா் பகுதியைச் சோ்ந்த சரவணகுமாா் மகன்கள் காா்த்திகுமாா் (22), சுரேஷ்குமாா் (22), ரெளடி காா்த்திக்குமாா் (எ) முயல் காா்த்தி, அவரது சித்தப்பா மகன் ரஞ்சித் ஆகிய 4 பேரும் தோ்பவனி நிகழ்வில் சப்பரம் முன் ஆடிக்கொண்டு சென்றனா்.
அப்போது அப்பகுதியைச் சோ்ந்த தாமஸ் ஆல்வா எடிசன் (53) என்பவா் 4 பேரையும் திடீரென அரிவாளால் வெட்டியதில் அவா்கள் காயமடைந்தனா். பின்னா் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவெறும்பூா் அரசு மருத்துவமனைக்கும் பின்னா் மேல் சிகிச்சைக்காக திருச்சி புத்தூா் அரசு மருத்துவமனைக்கும் அவா்கள் அனுப்பப்பட்டனா். தகவலறிந்த திருவெறும்பூா் போலீஸாா் தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் முயல் காா்த்தியின் கூட்டாளி பிரவீன் ஆகியோரைப் பிடித்து விசாரிக்கின்றனா்.