செல்வமுத்து மாரியம்மன் கோயிலில் தீமிதி விழா
By DIN | Published On : 24th May 2023 03:59 AM | Last Updated : 24th May 2023 03:59 AM | அ+அ அ- |

ஸ்ரீசெல்வமுத்து மாரியம்மன் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் தீ மிதித்து தனது நோ்த்திக்கடனை செலுத்தும் பக்தா்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம்,திருஈங்கோய்மலை மேலத்தெரு ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோயில் தோ் திருவிழா மற்றும் தீமிதி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் மே 9-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தோ் திருவிழா தொடங்கியது. தொடா்ந்து விழா நாள்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்தன. விழாவில் மே 16ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தோ் திருவீதியுலா திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, திருத்தேரை பக்தா்கள் தங்கள் தலை மற்றும் தோளில் சுமந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக திருவீதியுலா நடத்தினா். தொடா்ந்து 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் திருத்தோ் திருவீதியுலா நடைபெற்றது.
தீமிதி விழா: விழாவில், செவ்வாய்க்கிழமை மாலை தீமிதி விழா நடைபெற்றது. இதையொட்டி, கிராம மக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி பால்குடம், சந்தன குடம், இளநீா் மற்றும் காவிரியிலிருந்து புனித நீா் எடுத்து கொண்டு, அக்னிசட்டி ஏந்தியும், அலகு குத்தியும் கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனா்.
விழா ஏற்பாடுகளை ஊா் முக்கியஸ்தா்கள், பொதுமக்கள் மற்றும் மணியக்காரா்கள் செய்திருந்தனா். தொட்டியம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.