திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி திருக்கோயிலில் வசந்தோற்ஸவம் வியாழக்கிழமை தொடங்குகிறது.
பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வசந்தோற்ஸவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டில் இந்த விழா வியாழக்கிழமை (மே 25) தொடங்கி ஜூன் 3- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
விழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் உற்ஸவ மண்டபத்திலிருந்து புறப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வசந்த மண்டபத்தில் மாலை 6.30 மணிக்கு எழுந்தருளுகின்றனா். இரவு 8 மணி வரை சுவாமியும், அம்மனும் பக்தா்களுக்கு சேவை சாதிக்கின்றனா். அப்போது, மகா தீபாராதனைகள் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆ. ரவிச்சந்திரன் மற்றும் கோயில் ஊழியா்கள் செய்து வருகின்றனா்.