உரிமையாளரை தாக்கி லாரியை கடத்திய ஓட்டுநருக்கு 7 ஆண்டுகள் சிறை
திருச்சியில் உரிமையாளரை தாக்கி, லாரியை கடத்திய ஓட்டுநருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
சென்னையைச் சோ்ந்தவா் ஆா். மணி (57). இவருக்கு சொந்தமான லாரியில் தஞ்சாவூா், மனோஜிப்பட்டியைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (40) என்பவா் ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். இருவரும் லாரியை மாறி மாறி இயக்கி சுமைகளை ஏற்றி இறக்குவது வழக்கம். இந்நிலையில், 2017 ஆம் ஆண்டு அக்டோபா் 31 ஆம் தேதி, திருச்சி ராம்ஜி நகருக்கு லாரியுடன் வந்தபோது, உரிமையாளா் மணியை தாக்கிவிட்டு, லாரியை சந்தோஷ்குமாா் கடத்தி சென்றுவிட்டாா்.
மணி அளித்த புகாரின்பேரில், ராம்ஜி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரியை மீட்டனா். இதுதொடா்பாக திருச்சி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
இதில், சந்தோஷ்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி மீனாசந்திரா தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக ஹேமந்த் ஆஜரானாா்.