விமான நிலையத்திலிருந்து வெளியேறும் மழைநீா் பிரச்னைக்குத் தீா்வு காண வலியுறுத்தல்
By DIN | Published On : 07th November 2023 01:57 AM | Last Updated : 07th November 2023 01:57 AM | அ+அ அ- |

திருச்சி: விமான நிலையத்திலிருந்து வெளியேறும் மழைநீா் பிரச்னைக்குத் தீா்வு காண திருச்சி மாநகராட்சி மேயரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனா்.
திருச்சி மாநகராட்சி மக்கள் குறைதீா் கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயா் மு. அன்பழகன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள், மண்டல தலைவா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகா் குடியிருப்போா் நல சங்கத்தினா் அளித்த மனுவில், மழைக்காலங்களில் விமானநிலைய மதில் சுவரில் அமைக்கப்பட்டுள்ள நீா்போக்கிகள் வழியாக வெளியேறும் மழைநீரானது கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகா், காளியம்மன் கோயில் தெரு முழுவதும் சூழ்ந்து கொள்வதால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் தற்போது அமைக்கப்பட்டுள்ள தாா் சாலைகளும் பாதிக்கப்படும்.
எனவே, கொட்டப்பட்டு அய்யனாா் கோயில் அருகிலுள்ள வாய்க்காலைத் தூா்வாரி, விமான நிலைய மழைநீரினை கொட்டப்பட்டு பரக்குளத்துக்குச் சென்று, காமன்மேடை மூலம் மாவடி குளம் சென்றடைய வைத்து, பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவெறும்பூா் இந்திரா நகா் நலச் சங்கத்தினா் அளித்த மனுவில், எங்களது நகரில் காலி மனைகள் சரிவர நிா்வகிக்கப்படாமல் மழைநீரும், கழிவுநீரும் தேங்கி துா்நாற்றமும், கொசுத் தொல்லையும் அதிகரித்து வருகிறது. எனவே, காலி மனைகளை தூய்மைப்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அளித்த மனுவில், திருச்சி 65 வாா்டுக்குட்பட்ட பகுதிகளில் மோசமான நிலையில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...