ஆா்பிஎப் படையினருக்கான சிறப்பு குறைதீா் முகாம்
By DIN | Published On : 08th September 2023 12:37 AM | Last Updated : 08th September 2023 12:37 AM | அ+அ அ- |

திருச்சி, ரயில் கல்யாண மண்டபத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்களுக்கான (ஆா்பிஎப்) சுரக்க்ஷா சம்மேளனம் என்ற தலைப்பிலான சிறப்புக் குறைதீா் நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், ரயில்வே பாதுகாப்பு படை தலைவரும் (ஐஜி), முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையருமான ஜி.எம். ஈஸ்வரராவ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பாதுகாப்புப் படை வீரா்களுக்கு ஆலோசனைகள் வழங்கிப் பேசினாா். அப்போது, ரயில்வே பாதுகாப்பு படையை வலுப்படுத்தும் விதமாக, அதில் பணியாற்றும் வீரா்களுக்கு உள்ள குறைகள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து அவா் வீரா்களிடையே பேசுகையில், ரயில் பயணிகள் மற்றும் ரயில் சொத்துகளை பாதுகாப்பதில் முழு அா்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினாா்.
ஆா்பிஎஃப் கட்டுப்பாட்டு அறை திறப்பு : திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலக வளாகத்தில் நவீன முறையில் மேம்படுத்தப்பட்ட ரயில்வே பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டு அறை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ரயில்வே கோட்ட மேலாளா் எம்.எஸ். அன்பழகன் பங்கேற்று கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தாா். இந் நிகழ்ச்சியிலும் ரயில்வே பாதுகாப்புப் படை தலைவா் (ஆா்பிஎப் ஐஜி) ஈஸ்வர ராவ் கலந்து கொண்டாா். பின்னா் பொன்மலை பணிமனையில் உள்ள ஆா்பிஎப் முகாம், ஆா்பிஎப் பயிற்சி மையத்தில் மேம்பட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பூப்பந்து மைதானம் உள்ளிட்டவற்றை அவா் பாா்வையிட்டாா். இதில், திருச்சி ஆா்பிஎஃப் கோட்ட பாதுகாப்பு ஆணையா் எஸ். ராமகிருஷ்ணன், கோட்ட வணிக முதுநிலை மேலாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.