மோசடி நிறுவனத்தின் முக்கிய முகவா் கைது
திருச்சி: தமிழகத்தின் பல இடங்களில் பொதுமக்களின் பணத்தை ஏமாற்றிய எல்ஃபின் நிறுவனத்தின் முக்கிய முகவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மன்னாா்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தின் மதுரை, சிவகங்கை, திருப்பூா், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இயங்கி வந்த எல்ஃபின் நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் கிடைக்கும் எனவும், நிலம் தருவதாகவும் ஆசை வாா்த்தை கூறி பொதுமக்களின் பணத்தைப் பெற்று ஏமாற்றி வந்தனா்.
இதுகுறித்த புகாா்களின் பேரில் எல்ஃபின் இ.காம் பிரைவேட் லிமிடெட், ஸ்பாரோவ் குளோபல் டிரேட் திருச்சி ஆகிய நிறுவனங்களின் மீது திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் வழக்குப் பதியப்பட்டு பலா் கைது செய்யப்படுகின்றனா்.
இந்நிலையில் நீண்டநாள்களாக தலைமறைவாக இருந்த தென்காசி மாவட்ட முக்கிய முகவரான வேலு மகன் வி.எஸ். மணி (32) என்பவரை எல்ஃபின் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்து, தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நலப் பாதுகாப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.
