நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளரை தாக்கியவா் மீது வழக்கு
திருச்சியில் நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளரை தாக்கியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகேயுள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் உதவிப் பொறியாளராக உள்ளவா் தஞ்சாவூரைச் சோ்ந்த தோ. சமயசக்தி (44). இவருக்கும், இவரது அலுவலகத்தில் தட்டச்சராக உள்ள லால்குடியைச் சோ்ந்த பெண்ணின் கணவா் ம. ராஜாவுக்கும் (35) இடையே ஏற்கெனவே பிரச்னை இருந்தது.
இந்நிலையில் ம. ராஜா செவ்வாய்க்கிழமை அலுவலத்துக்கு வந்தபோது தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து கேட்ட நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் சமயசக்தியை ராஜா தாக்கிவிட்டு தப்பினாா். இதில் காயமடைந்த சமயசக்தி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
