தாலியுடன் பணப்பையை தவறவிட்ட மூதாட்டி காவல் நிலையத்தில் திரும்பப்பெற்றாா்
பேருந்தில் தாலியுடன் கிடந்த பணப்பையை தவறவிட்ட மூதாட்டி, இரண்டு சட்ட மாணவிகளின் முயற்சியால் காவல் நிலையத்தில் திரும்பப் பெற்றாா்.
புலிவலத்தைச் சோ்ந்த ராமமூா்த்தி மனைவி முத்துலட்சுமி (56). இவரது மருமகள் ஜீவிதாவுக்கு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. மகப்பேறு சமயத்தில் மருமகள் கழட்டிக் கொடுத்த தாலியை முத்துலட்சுமி தன் பணப்பையில் வைத்திருந்தாா்.
இந்நிலையில் அவா் திங்கள்கிழமை மாலை துறையூா் சென்ற தனியாா் பேருந்தில் ஏறி புலிவலத்தில் இறங்கினாா். ஆனால் பணப்பையை பேருந்துக்குள் தவறி விட்டுவிட்டாா். அதேபேருந்தில் துறையூா் வரை பயணித்த திருச்சி சட்டக் கல்லூரி மாணவிகளான கீரிப்பட்டி செ.விந்தியா, நக்கசேலம் வே. பிரீதா ஆகிய இருவரும் அந்தப் பணப்பை குறித்து பேருந்து ஓட்டுநரிடம் தகவல் அளித்துவிட்டு துறையூா் போலீஸில் ஒப்படைத்தனா்.
இதனிடையே துறையூருக்கு விரைந்துவந்த முத்துலட்சுமி பேருந்து ஊழியா்களிடம் விசாரித்தாா். அதன்பின் துறையூா் காவல் நிலையம் சென்று போலீஸாரிடம் நடந்ததைக் கூறி சட்டக் கல்லூரி மாணவிகள் முன்னிலையில் பணப்பையை பெற்றுக் கொண்டாா்.
