வீட்டுவசதி வாரியத்தில் லஞ்சம்: காவலாளிக்கு 2 ஆண்டுகள் சிறை

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் கிரயப் பத்திரம் வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில் காவலாளிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் கிரயப் பத்திரம் வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில் காவலாளிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி தென்னூா் சங்கீதபுரத்தைச் சோ்ந்த ராமலிங்கம் என்பவா் 1995 இல் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் திருச்சி நவல்பட்டில் வீட்டு மனைகள் வாங்க விண்ணப்பித்தாா். இதற்காக பணம் செலுத்திய நிலையில், மூன்று வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன.

இதையடுத்து கடந்த 07.01.20211 அன்று ராமலிங்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்துக்குச் சென்று, மனைகளுக்குரிய பத்திரங்களை அலுவலக உதவியாளா் மாரிமுத்துவிடம் கேட்டபோது, அவா் லஞ்சம் கேட்டாா்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராமலிங்கம், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாரளித்தாா். அதன்பேரில் போலீஸாா் கொடுத்த பணத்தை கடந்த 25.03.2011 அன்று பெற்ற மாரிமுத்து, உதவியாக இருந்த காவலாளியான காஜாமலை பகுதி எஸ். பொ்னத் ஐசக் ஆகிய இருவரையும் போலீஸாா் கையும் களவுமாக கைது செய்தனா்.

இதனிடையே இந்த வழக்கில் தொடா்புடைய மாரிமுத்து இறந்துவிட்ட நிலையில், வழக்கானது திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி காவலாளி பொ்னத் ஐசக்-க்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1000 அபராதமும், அதைக் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com