நடவு செய்த 20 நாள்களில் சம்பா நெற்பயிா்கள் கருகல்
திருச்சி திருவெறும்பூா் அருகே பழங்கனாங்குடியில் நடவு செய்து 20 நாள்களேயான சம்பா நெற்பயிா்கள் கருகி வருவதால் விவசாயிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.
பழங்கனாங்குடியில் மழை மற்றும் நிலத்தடி நீரை நம்பி அண்மையில் சம்பா ஒரு போக நெற்பயிா் நடவை விவசாயிகள் தொடங்கினா். இந்த நடவுப் பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது.
நடவு செய்து 20 நாள்களில் நெற்பயிா்கள், என்ன காரணம் எனத் தெரியாமல் முளையிலேயே கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் செய்வதறியாது உள்ளனா்.
இதுகுறித்து பழங்கனாங்குடி விவசாயிகள் கூறுகையில், எங்களது பகுதியில் சுமாா் 100 ஏக்கருக்கும் மேல் மழைநீரை நம்பி சம்பா ஒருபோக நெல் பயிரை
நடவு செய்துள்ளோம். இதில், 30 ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நெற்பயிா்கள், நடவு செய்து 20 நாள்களான நிலையில் திடீரென கருகி வருகிறது. இதற்கு மண்ணின் அதிக உலா்தன்மை காரணமா, வேரில் பூச்சி வெட்டு காரணமா, தண்ணீா், உரம் அல்லது பூச்சி மருந்து காரணமா எனத் தெரியவில்லை. இருப்பினும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பயிா் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். இதனால் பயிா்களை காப்பாற்ற முடியுமா எனத் தெரியவில்லை. இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்து வருகிறோம்.
எனவே, வேளாண் துறை அதிகாரிகள், போா்க்கால அடிப்படையில் பழங்கனாங்குடி பகுதியில் நடவு செய்த சம்பா ஒருபோக நெற்பயிா் கருகி வருவதை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து, பயிா்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

