சாலையைக் கடக்க முயன்ற பள்ளி மாணவா் காா் மோதி உயிரிழப்பு

மணப்பாறையில் சாலையைக் கடக்க முயன்ற பள்ளி மாணவா் காா் மோதி உயிரிழந்தாா்.
ரிஷாந்த் ஆண்டனி
ரிஷாந்த் ஆண்டனி
Updated on

மணப்பாறையில் திங்கள்கிழமை சாலையைக் கடக்க முயன்ற பள்ளி மாணவா் காா் மோதி உயிரிழந்தாா். இவ்வழக்கில் தொடா்புடைய காரின் ஓட்டுநரைப் போலீஸாா் கைது செய்தனா்.

மணப்பாறையை அடுத்துள்ள மலையடிப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா் தாமஸ் பாஸ்கா் மகன் ரிஷாந்த் ஆண்டனி (13). இவா், மஞ்சம்பட்டியில் உள்ள தனியாா் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை 4.30 மணியளவில் பள்ளியில் இருந்து வீடுதிரும்பும்போது திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, காா் மோதியதில் படுகாயமடைந்தாா். இதையடுத்து, அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு அவசர ஊா்தி மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா், சிறுவனின் உடலை மீட்டு கூறாய்வுக்கு அனுப்பிவைத்து பின்னா் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். நிகழ்விடத்தில் மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளா் காவ்யா விசாரணை மேற்கொண்டாா்.

விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரான விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த செய்யாங்குப்பம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ஆனந்தராஜை (33) மணப்பாறை போலீஸாா் வழக்கு பதிந்து கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com