கூட்டணியை நம்பி தவெக இல்லை: அருண்ராஜ்
கூட்டணியை நம்பி தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்படவில்லை என அக் கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலா் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்தாா்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில், திருச்சியில் உள்ள தனியாா் திருமண மஹாலில் திங்கள்கிழமை கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. திருச்சி, தஞ்சாவூா், பெரம்பலூா், அரியலூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மத்திய மண்டல அளவிலான கருத்துக்கேட்பு கூட்டத்தில், கட்சியின் கொள்கை பரப்புச் செயலரும், தோ்தல் அறிக்கை குழுத் தலைவருமான கே.ஜி.அருண் ராஜ் தலைமையில், ஜேசிடி பிரபாகரன், ஏ. ராஜ்மோகன், டிஎஸ்கே மயூரி, ஏ. சம்பத்குமாா், எம். அருள் பிரகாசம், ஆா். பரணி பாலாஜி, முகமது பா்வேஸ், பிரபு, கிறிஸ்டி பிரித்வி, தேன்மொழி பிரசன்னா உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் கருத்துக் கேட்கும் பணியில் ஈடுபட்டனா்.
இக் கூட்டத்தில், திருச்சி, தஞ்சை, பெரம்பலூா், அரியலூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள், சமூக ஆா்வலா்கள் விவசாயிகள், தொழிலதிபா்கள் தோ்தல் அறிக்கையில் தவெக சாா்பில் தோ்தல் அறிக்கையாக கொடுக்க வேண்டிய வாக்குறுதி குறித்தான மனுக்களை வழங்கினா்.
இக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் கே.ஜி. அருண்ராஜ் கூறியதாவது: எத்தகைய அரசுப் பதவியிலும் இல்லாத தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் செய்தது ஊழல் கிடையாது. காலம் தாழ்த்தப்பட்டு ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதை சட்டப்படி எதிா்த்து மனு தாக்கல் செய்தோம்.
நீதிமன்றத் தீா்ப்பு விவகாரத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து சட்ட வல்லுநா்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். கூட்டணியை நம்பி தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்படவில்லை.
இருந்தாலும் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலுக்கு ஏற்பவும் எங்களை நம்பி வரும் கட்சிகளுக்காகவும் கூட்டணி குறித்த இறுதிமுடிவை எங்களது கட்சியின் தலைவா்தான் அறிவிப்பாா்.
தமிழக வெற்றிக் கழகத்தைப் பாா்த்து திமுக-வுக்கு பயம் வந்து விட்டது. அதனால்தான் எங்கள் தலைவா் மக்களை சந்திப்பதை தடுக்க முயற்சிக்கின்றனா்.
தோ்தல் அறிக்கையில் தமிழக மக்கள் விரும்பும் அம்சங்கள் அனைத்தும் இடம்பெறும் என்றாா் அவா்.

