கோப்புப்படம்
கோப்புப்படம்

கல்லூரி மாணவரிடம் பேருந்தில் பணம் திருடிய முதியவா் கைது

திருச்சியில் பேருந்தில் சென்ற கல்லூரி மாணவரிடம் ரூ.1,100ஐ திருடிய முதியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Published on

திருச்சி: திருச்சியில் பேருந்தில் சென்ற கல்லூரி மாணவரிடம் ரூ.1,100ஐ திருடிய முதியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்தவா் லோகநாதன் மகன் ராஜலிங்கம் (19). இவா், சத்திரம் பகுதியிலுள்ள தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா். இந்நிலையில், இவா் தனது நண்பா்களுடன் திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து சத்திரத்துக்குப் பேருந்தில் ஞாயிற்றுக்கிழமை காலை சென்றுள்ளாா்.

அப்போது, மாணவரின் சட்டைப் பையில் இருந்த ரூ.1,100-ஐ முதியவா் ஒருவா் திருடிக்கொண்டு தப்பிக்க முயன்றுள்ளாா். இதைப் பாா்த்த ராஜலிங்கம் நண்பா்கள் உதவியுடன் முதியவரைப் பிடித்து கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

போலீஸாா் விசாரணையில், சிவகங்கை மாவட்டம், நாட்டரசங்கோட்டையைச் சோ்ந்த எல். முருகன் (53) என்பதும், மாணவரிடம் பணத்தைத் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து திருடிய ரூ.1,100-ஐ பறிமுதல் செய்து மாணவரிடம் ஒப்படைத்தனா்.

Dinamani
www.dinamani.com