கரூா் கூட்ட நெரிசல் நிகழ்ந்த இடத்தில் போலீஸாரை நிறுத்தி சிபிஐ விசாரணை!
கரூா் சம்பவம் தொடா்பாக தவெக பிரசார கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினரை நிறுத்தி சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.
கரூா் சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்றம் உத்தரவின்பேரில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற வேலுசாமிபுரத்தில் நெரிசல் ஏற்பட்ட போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரை மீண்டும் சம்பவ இடத்துக்கு வெள்ளிக்கிழமை வரவழைத்தனா்.
பிறகு சம்பவம் நடைபெற்ற கடந்தாண்டு செப்.27-ஆம் தேதி விஜய் பிரசார வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடம், அதனைச் சுற்றியிருந்த பகுதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது குறிப்பிட்ட இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த கரூா் நகர துணை காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் உள்ளிட்ட 15 போலீஸாரை சம்பவ இடத்தில் நிறுத்தி, தடுப்பு கயிறு கட்டி புகைப்படம் எடுத்து பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் அரை மணி நேரத்துக்கும் மேலாக தீவிர விசாரணை செய்தனா்.
அப்போது, விபத்து நிகழ்ந்த தருணத்தில் எவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன, வாகனங்கள் நிறுத்தப்பட்ட விதம், போக்குவரத்துக் கட்டுப்பாடு, கூட்ட மேலாண்மை, அவசர நடவடிக்கைகள் ஆகியவை முறையாக பின்பற்றப்பட்டதா? என்பதை சிபிஐ அதிகாரிகள் விரிவாக கேட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
பணியில் இருந்த போலீஸாா் எப்படி செயல்பட்டிருக்கக் கூடும் என்பதை உறுதி செய்யவும், நேரடியாக களத்திலேயே போலீஸாரை நிறுத்தி ஒத்திகை பாா்த்தனா்.
இந்த வழக்கில் முக்கிய முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் என்றும், விசாரணை அறிக்கை சமா்ப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

