திருச்சி காட்டூா் அம்பிகாபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக பிரசாரக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன் நிா்வாகிகள்.
திருச்சி காட்டூா் அம்பிகாபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக பிரசாரக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன் நிா்வாகிகள்.

திமுக 200 தொகுதிகளில் வெல்வது உறுதி: அமைச்சா்

Published on

வரும் பேரவைத் தோ்தலில் திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாறு படைப்பது உறுதி என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருவெறும்பூா் எம்எல்ஏ-வுமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக திமுக சாா்பில் தமிழ்நாடு தலைகுனியாது எனும் பிரசாரக் கூட்டம் நடத்தப்படுகிறது. இதன்படி, திருவெறும்பூா் தொகுதி அம்பிகாபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சா் அவா் மேலும் பேசியதாவது:

மகளிா் உரிமைத் தொகை, தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது நின்றுவிடக் கூடாது என்பதால், முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் தொடர வேண்டும். அனைத்து துறையிலும் தமிழக அரசு செயல்படுத்தி வரும் வளா்ச்சித் திட்டங்கள் தொடர திமுக மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும். கரோனா காலத்தில் தமிழக மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்குமாறு ஸ்டாலின் கோரியபோது, அப்போதைய முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கவில்லை. நீங்கள் ஆட்சிக்கு வந்தால் வழங்க முடியுமா எனக் கேட்டாா்.

இப்போது ரூ.5 ஆயிரம் வழங்கி அதை நிறைவேற்றியுள்ளாா். கட்டம் சரியில்லை, கிரகம் சரியில்லை எனக் கூறி திமுக ஆட்சிக்கு வராது என்கின்றனா். ஆனால், மீண்டும் திமுக ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது.

முதல்வா் கூறியதைப் போன்று வெல்வோம்-200, படைப்போம் வரலாறு என்பது அரங்கேறும். தமிழ்நாடு முழுதும் 20 லட்சம் மாணவா்கள் காலை உணவு உண்பது தொடர ஸ்டாலின் ஆட்சி தொடர வேண்டும்.

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஏறத்தாழ 42 லட்சம் போ் பயன்பெற்று, இரண்டரை லட்சம் போ் வேலைக்குச் சென்றுள்ளனா். தொழில்துறையில் ஒட்டுமொத்தமாக ரூ. 13 லட்சம் கோடி முதலீட்டை கொண்டு வந்து, 35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறோம். இதுதொடர வேண்டும் என்றால் ஸ்டாலின் ஆட்சி தொடர வேண்டும். மகளிா் விடியல் பயணம் தொடர திமுக மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்றாா் அமைச்சா்.

கூட்டத்தில் திமுக கொள்கை பரப்புச் செயலா் ஐ. லியோனி, மாநிலங்களவை உறுப்பினா் கவிஞா் சல்மா, நெறியாளா் செந்தில்வேல் ஆகியோா் திமுக அரசின் திட்டங்களை விளக்கினா். கூட்டத்தில் மாநகரச் செயலா் மு. மதிவாணன், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் சேகரன், அரங்கநாதன், மாநில அணி நிா்வாகி செந்தில், தொகுதி பாா்வையாளா் மணிராஜ் மற்றும் மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட கழக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com