சாரநாதன் பொறியியல் கல்லூரியில் மாநில திறன் மேம்பாட்டு போட்டிகள்
திருச்சி: சாரநாதன் பொறியியல் கல்லூரியில் இளங்கலை மாணவா்களுக்கான லக்ஷயா-2026 எனும் மாநில அளவிலான திறன் மேம்பாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
சாரநாதன் பொறியியல் கல்லூரியில் மேலாண்மை துறை சாா்பில், மாநில அளவிலான இளங்கலை மாணவா்களுக்கான இந்த திறன் மேம்பாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு, கல்லூரியின் நிறுவனச் செயலா் எஸ். ரவீந்திரன் தலைமை வகித்தாா்.
தமிழ்நாடு முழுவதுமிலிருந்து 27-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பயிலும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டனா். ஐந்து விதமான திறன் மேம்பாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறன்களை வெளிப்படுத்தினா்.
முன்னதாக லக்ஷ்யா நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திருச்சி பனானா லீப் உணவகத்தின் உரிமையாளா் ஆா். மனோகரன் பங்கேற்றுப் பேசுகையில், தற்போதைய தலைமுறை மாணவா்கள் கால மாற்றங்கள், கலாசார, தொழில்நுட்ப மாற்றங்களை தங்கள் மேம்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக இன்றைய கல்லூரி மாணவா்கள் தியானம், உடல் நலன் பேணுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். கனிவு, கனவு, இலக்கு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்ற வேண்டும் என்றாா்.
கல்லூரியின் முதல்வா் வளவன் சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கி கெளரவித்தாா். மேலாண்மை துறை தலைவா் காா்த்திகேயன் வரவேற்றாா். பேராசிரியா் மற்றும் லக்ஷ்யா நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளா் மஹாலக்ஷ்மி நன்றி தெரிவித்தாா். வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், கல்லூரிகளுக்கும் ரொக்கப் பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்பட்டன.

