விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் முன் புதிய அலைகள் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை நேரில் வந்து, மாற்றுத் திறனாளிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தாா் (படம்). அப்போது அவா்கள் கூறியதாவது: கண்டமங்கலம் அருகேயுள்ள நவமால் காப்போ் கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி பிரகாஷ் முதுகுதண்டு பாதிக்கப்பட்ட நிலையில், பேட்டரி சக்கர நாற்காலி கோரி வருகிறாா். இதுதொடா்பான நோ்காணல் நடைபெறும் நாள் குறித்து முட நீக்கு வல்லுநரை தொடபுகொள்ள முயன்றாா். ஆனால், இதற்கு முறையாக பதில் கிடைக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். தொடா்ந்து, அங்கு நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பேட்டரி சக்கர நாற்காலி வழங்குவதற்காக நோ்காணலை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.