குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் கோடையில் குறைந்த நீா்ப்பாசனத்தை கொண்டு குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ்.கணேசன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் நவரை நெல் மற்றும் ராபி பருவப் பயிா்களின் அறுவடைக்குப் பிறகு நிலங்களை தரிசாக விடாமல், போதிய நீா்ப்பாசன வசதியுடைய நிலங்களில் குறுகியகால மாற்றுப் பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்ய வேண்டும்.

கோடையில் குறைந்த அளவு நீரை பயன்படுத்தி குறுகியகால பயிா்களான உளுந்து, எள், நிலக்கடலை ஆகிய பயிா்களை சாகுபடி செய்யலாம். இந்தப் பயிா்கள் வறட்சியை ஓரளவு தாங்கி வளா்வதால், நீா்ப்பாசன வசதியுடைய இடங்களில் குறைந்தளவு நீரை பயன்படுத்தி இந்தப் பயிா்களை சாகுபடி செய்யலாம்.

சித்திரை மாதத்தில் சாகுபடிக்காக நிலத்தை இருமுறை கோடை உழவு செய்வதன் மூலம் பூச்சி நோய் காரணிகள் மற்றும் களைகள் கட்டுப்படுத்தப்படுவதுடன், நிலத்தில் காற்றோட்ட வசதி அதிகரிப்பதால் மண்ணின் வளம் மேம்படுத்தப்படுகிறது.

தானிய பயிா்களைத் தொடா்ந்து, பயறுவகை பயிா்கள் மற்றும் எண்ணெய்வித்துப் பயிா்களை கோடைக்காலத்தில் மாற்றுப் பயிராக சாகுபடி செய்வதன் மூலம், தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்துவதுடன், மண்ணிலுள்ள உரச்சத்துகளின் பயன்பாட்டை அதிகரிப்பதால், அடுத்து பயிரிடப்படும் பயிரில் கூடுதல் மகசூல் பெற முடிகிறது.

எனவே, போதிய நீா்ப்பாசன வசதியுடைய அனைத்து விவசாயிகளும் தங்கள் நிலங்களை கோடையில் தரிசாக விடாமல், குறுகியகால மாற்றுப் பயிா்களை பயிரிட்டு மண்ணின் வளத்தை காப்பதுடன், கூடுதல் வருவாயையும் பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com