குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள வாலாஜா ஏரி தூர்வாரும் பணியை செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள வாலாஜா ஏரியில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு திட்ட நிதியின் கீழ் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியது: வாலாஜா ஏரி தூர்வாரும் பணிகள் என்எல்சி நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்ட நிதியின் கீழ் ரூ.13.72 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் கடந்த 3.3.2014-ல் தொடங்கியது.
வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் (மழைக் காலத்துக்கு முன்) பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஏரியின் மூலம் 11,392 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும். ஏரியிலிருந்து 21 லட்சம் க.மீ மண் நீக்கம் செய்யப்பட்டு கரையின் நீளம் 5,200 மீட்டரும், அகலம் 12 மீட்டர் அளவுக்கு அமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் 25.40 க.மீ. கொள்ளளவு நீர் தேக்கப்படும் என்றார்.
ஆய்வின் போது என்.எல்.சி. சுரங்க இயக்குநர் ரவிந்திரநாத், கொள்ளிட வடிநில கோட்ட செயற்பொறியாளர் செல்வகுமார், உதவி செயற்பொறியாளர்கள் கண்ணன், சோழராஜன், குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.