சமூக நல அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே புதன்கிழமை ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக ஏடிஸ் கொசுப்புழுக்கள் இருக்குமிடத்தைக் கண்டறியும் வகையில், மழைநீர் தேங்க வாய்ப்புள்ள உபயோகமற்ற பொருள்களான டயர், டீ கப், தேங்காய் சிரட்டை ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டுமென மாவட்ட நிர்வாகம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக கடலூரில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே புதன்கிழமை ஆய்வு செய்தார்.
அப்போது, அலுவலக வளாகத்தில் உள்ள அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளி, அன்னை சத்யா அரசுக் குழந்தைகள் காப்பகம், விடுதி ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிறுவர்களின் விளையாட்டு உபகரணங்களில் மழைநீர் தேங்காவண்ணம் பராமரிக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது கடலூர் மாவட்ட சமூக நல அலுவலகக் கண்காணிப்பாளர் எஸ்.சிவராமகிருஷ்ணன், அரசு சேவை இல்லக் கண்காணிப்பாளர் எஸ்.அமுதா, நகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.