ஒக்கி புயலில் சிக்கி மாயமான மீனவர்களின் குடும்பத்தினருக்கு முன்னாள் எம்எல்ஏ கோ.ஐயப்பன் வியாழக்கிழமை ஆறுதல் கூறினார்.
கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்காக கன்னியாகுமரி, கேரள மாநிலத்துக்குச் சென்றிருந்தனர். இவர்களில் சிலர் ஒக்கி புயலில் சிக்கி மாயமாகினர்.
அவர்கள் குறித்த விவரம் இதுவரை தெரியாததால் குடும்பத்தினர், கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த நிலையில், தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், ராசாப்பேட்டை ஆகிய மீனவ கிராமங்களுக்கு கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கோ.ஐயப்பன் வியாழக்கிழமை சென்றார்.
அங்கு பாதிக்கப்பட்ட மீனவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோரைச் சந்தித்து காணாமல் போன மீனவர்கள் குறித்த விவரங்களை அளித்து, அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும், மாவட்ட ஆட்சியரை சந்தித்து நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்படவர்களின்குடும்பத்துக்கு போதுமான நிவாரண உதவிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அப்போது, அதிமுக மீனவரணி மாவட்டச் செயலர் தங்கமணி, வர்த்தக அணி வரதன், டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஏ.பிரகாஷ், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் தி.ரவிச்சந்திரன், ஆதிபெருமாள், நகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் ராஜூ, வனிதாசேகர், தங்கமணி, சக்திவேல், முத்துக்குமார், தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் பெரு.ஏகாம்பரம், நிர்வாகிகள் கன்னியப்பன், அருள்மணி ஆகியோர் உடனிருந்தனர்.