வெலிங்டன் நீர்த் தேக்கத்தில் கரை அமைக்கப்பட்ட பணி குறித்து நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டுமென சி.வெ.கணேசன் எம்எல்ஏ புதன்கிழமை வலியுறுத்தினார்.
திட்டக்குடியை அடுத்த கீழச்செருவாயில் உள்ள வெலிங்டன் நீர்த் தேக்க கரையில் திங்கள்கிழமை விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் திட்டக்குடி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் சி.வெ.கணேசன் புதன்கிழமை நீர்த்தேக்கத்தை பார்வையிட்டு விரிசல் விழுந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரையை தரமாக அமைக்காததால் தற்போது உள் வாங்கியுள்ளது. அதே நேரத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.20 கோடியில் கட்டப்பட்ட கரை பாதுகாப்பாக உள்ளது. தற்போது ஒதுக்கப்பட்ட நிதியில் பணிகளை முழுமையாகவும், தரமானதாகவும் செய்யவில்லை. வெலிங்டனின் மொத்த கொள்ளளவான 30 அடியில் 15 அடி தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில் 6 இடங்களில் கரை உள் வாங்கியது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. தரமான பணி நடைபெற்றதா என நீதி விசாரணை செய்ய வேண்டும்.மேலும் தண்ணீர் பிடித்தால் கரை உடைந்து சுமார் 30 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது.
இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். எனவே, கரையை சீரமைக்க வல்லுநர்களை நியமித்து பணியை விரைந்து முடிக்க வேண்டும். இல்லையெனில் திமுக சார்பில் மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.
இதையடுத்து, கரையில் விரிசல் விழுந்ததற்கான காரணம் குறித்து, கடலூர் மாவட்ட பொதுப் பணித்துறை உயர் அலுவலர்களுடன் எம்எல்ஏ கலந்தாலோசித்தார்.