என்எல்சி இந்தியா நிறுவனம் ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டுமென சிஐடியூ தொழிற்சங்கம் வலியுறுத்தியது.
இது குறித்து கடலூர் மாவட்ட இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியூ) மாவட்டச் செயலர் பி.கருப்பையன் வெளியிட்ட அறிக்கை:
என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் சட்டப்படி மாதத்துக்கு 26 நாள்கள் வேலை வழங்கி வந்த நிர்வாகம் ஜூலை 13 முதல் 19 நாள்கள் மட்டுமே பணி வழங்கப்படுமென அறிவித்துள்ளது. இதனைக் கண்டித்து தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு சிஐடியூ முழு ஆதரவு அளிக்கிறது. பணி நாள்கள் குறைப்புக்கு வருவாய் இழப்பே காரணம் என நிர்வாகம் கூறுவது ஏற்புடையதல்ல. வருவாய் இழப்பு ஏற்படுவது உண்மையென்றால் அதற்கு நிர்வாகமே காரணம்.
தமிழக அரசு அதிக விலை கொடுத்து தனியார் நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்குவதை கைவிட்டு பொதுத் துறை நிறுவனமான என்எல்சியில் வாங்க வேண்டும்.
போராடும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கையை பேசி தீர்ப்பதற்கு என்எல்சி நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.