தனியார் தண்ணீர் தொழிற்சாலையைக் கண்டித்து, விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருத்தாசலம் வட்டம், கர்னத்தம் கிராமத்தில் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சுமார் 1,500 அடி வரையில் ராட்சத அளவிலான ஆழ்துளைக் கிணறு அமைத்து தண்ணீர் உறிஞ்சுவதாகவும், அதனால் அருகிலுள்ள கர்னத்தம், காட்டுப்பரூர், மு.அகரம், விசலூர் ஆகிய கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து விட்டதாகவும் இந்தியக் குடியரசுக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதிக அளவில் தண்ணீர் உறிஞ்சப்படுவதால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதோடு, பொதுமக்களுக்கும் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளதால் இந்த சாலைக்குத் தடை விதிக்க வேண்டுமென அந்தக் கட்சிகள் வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தின.
எனினும், நடவடிக்கை எடுக்கப்படாததால் திங்கள்கிழமை கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு இந்தியக் குடியரசுக் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலர் கே.மங்காபிள்ளை தலைமை வகித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் பெ.கருப்புசாமி சிறப்புரையாற்றினார். இதில் இந்த இரு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் பங்கேற்று முழக்கமிட்டனர்.