ஏகதின பிரம்மசூத்திர போதனா வகுப்பு
கடலூர் திருப்பாதிரிபுலியூரில் உள்ள ஞானியார் மடாலயத்தில் ஏகதின பிரம்மசூத்திர போதனா வகுப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இந்த வகுப்பை வழக்குரைஞர் எஸ்.அருணாசலம் தலைமையில், ஞானியார் மடாலயத்தின் 9- ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ ஞானியார் சுவாமிகள் தொடக்கி வைத்தார். பிரம்ம சொரூபானந்தீஸ்வரர் ஸ்ரீஸ்ரீராம்குமார் மகராஜ் பிரவசனம் செய்து பேசுகையில், நமது வாழ்வில் செய்யும் ஒவ்வொரு கருமத்திற்கும் எதிர் வினையை பிறவிகள் எடுத்து கழிக்க வேண்டியுள்ளது. பாவங்கள் அதிகரிக்க, அதிகரிக்க எடுக்க வேண்டிய பிறவிகளும் அதிகரிக்கிறது. எனவே, பிறவா நிலை மோட்சத்தைப் பெற வேண்டுமெனில், பாவங்களை குறைத்து அடுத்தவர்களுக்கு உதவி செய்து இறை நிலையை அடைய வேண்டும் என்றார்.
மேலும், லட்சுமிஹயக்கிரீவர் அறக்கட்டளை நிர்வாகி சீனுவாசன், பாடலீசுவரர் கோயில் நாகராஜ்சிவம் குருக்கள், குருமூர்த்தி சிவாச்சாரியார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விரைவில் கடலூரில் வியாச முனிவருக்கு ஆலயம் அமைத்து வாரந்தோறும் பிரம்மசூத்திர போதனா வகுப்பு நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
ஓம்கார ஆசிரம மகளிர் பேரவைத் தலைவர் உலகேஸ்வரி, பிரதிமாத பூச அன்னதான தலைவர் எஸ்.ராமலிங்கம் மற்றும் எம்.ஆனந்தி, லட்சுமிபாய், ஞானேஸ்வரி, ஸ்ரீபிரேமலதாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, ஓங்கார ஆஸ்ரமத்தின் அதிபர் தவத்திரு.கோடீஸ்வரானந்தா சுவாமிகள் வரவேற்றுப் பேசினார்.