நியாய விலைக் கடையில் மண்ணெண்ணெய் வழங்க மறுத்ததால் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி பேரூராட்சிக்கு உள்பட்ட கூத்தப்பன்குடிக்காட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், நியாய விலைக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்தக் கடைகள் மூலம் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், புதன்கிழமை கூத்தப்பன்குடிக்காட்டில் உள்ள நியாய விலைக் கடை விற்பனையாளர், பலருக்கு எரிவாயு உருளை உள்ளதாகக் கூறி, மண்ணெண்ணெய் வழங்க மறுத்ததாகக் கூறிப்படுகிறது.
இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் திடீரென திட்டக்குடி - ராமநத்தம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த திட்டக்குடி போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.