இறால் பண்ணைகளுக்கு தடை விதிக்கக் கோரி, சிதம்பரத்தில் ஜூன் 7-ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபடுவது என கடற்கரையோர மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தினர் முடிவு செய்தனர்.
சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் கிள்ளையில் இந்த இயக்கத்தின் கிராம நிர்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ராதாவிளாகம் விவசாயி மோகன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் எல்.ஜீவா, கே.பரமானந்தம், ஏ.வினோபா, கே.திருஞானம், வாலிபர் சங்க ஒன்றிய நிர்வாகிகள் ஜி.ஆழ்வார், பிரதாப்சிங், முரளி, இயக்கத்தின் கிராம நிர்வாகிகள் கோவிந்தன், விஸ்வநாதன், வனிதா, மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தீர்மானம்: பிச்சாவரத்தை சுற்றி உள்ள பகுதிகளில் அரசின் அனுமதி பெற்றும், பெறாமலும் நூற்றுக்கணக்கான இறால் பண்ணைகள் இயங்கி வருகின்றன. இந்தப் பண்ணைகளால் மாங்குரோவ் காடுகள் அழியும் நிலை ஏற்படும். இறால் பண்ணை உப்பு நீரால் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டு, அப்பகுதியைச் சுற்றியுள்ள த.சோ.பேட்டை, வடக்கு பிச்சாவரம், தெற்கு பிச்சாவரம் உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இறால் பண்ணைகளுக்கு தடை விதிக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட கிராமங்களில் குடிநீர் வசதி கோரியும் வருகிற ஜூன் 7-ஆம் தேதி சிதம்பரம் காந்தி சிலை அருகே சாலை மறியல் போராட்டம் நடத்துவது.