ஆல்பேட்டை பகுதியில் காரில் ரூ.4 லட்சம் மதிப்பிலான மதுப் புட்டிகள் கடத்தியவர்கள், போலீஸாரை பார்த்ததும் தப்பிவிட்டனர். மதுப் புட்டிகளுடன் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர் - புதுவை எல்லையான ஆல்பேட்டை பகுதியில் தமிழக அரசின் மது விலக்கு அமலாக்கப் பிரிவு சோதனைச் சாவடி உள்ளது.
இங்கு, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் காவல் ஆய்வாளர் மீனாம்பிகை தலைமையில் காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்துமாறு போலீஸார் சைகை செய்தும் கார் நிற்காமல் சென்றது.
இதையடுத்து, போலீஸார் காரை துரத்திச் சென்றபோது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாகச் சென்ற கார், அரசு தொழில்பயிற்சி நிலையம் அருகே நின்றிருந்ததைப் போலீஸார் பார்த்தனர். ஆனால், காரில் இருந்தவர்கள் தப்பிவிட்டனர்.
காரை சோதனையிட்டபோது, அதில் புதுச்சேரி மதுபான வகைகள் 80 அட்டைப் பெட்டிகளில் இருந்தது தெரிய வந்தது. ஒவ்வொரு அட்டைப்பெட்டியிலும் 180 மில்லி கொள்ளவு கொண்ட 48 மது புட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, மது புட்டிகளுடன் காரை போலீஸார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுப் புட்டிகளின் மதிப்பு ரூ.4 லட்சம் எனக் கூறப்படுகிறது.
காரிலிருந்து தப்பியவர்கள் குறித்து கடலூர் புதுநகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.