அடிப்படை வசதியின்றி மக்கள் அவதி: அதிகாரிகள் சமரசம்
நெய்வேலியில் போதிய அடிப்படை வசதி இல்லாத பிரச்னை தொடர்பாக பொதுமக்களிடம் அதிகாரிகள் வியாழக்கிழமை சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
நெய்வேலி என்எல்சி நிறுவனத்துக்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள், என்எல்சி தலைமை அலுவலகம் அருகே உள்ள மாற்றுக் குடியிருப்பில் ஏ, பி பிளாக் பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்கள், தங்களுக்கு குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி, பேருந்து, கழிவு நீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இந்தக் கோரிக்கைகளை என்எல்சி நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லையாம். இதனால், நெய்வேலி மக்கள் தொடர்பு அலுவலகம் அருகே உள்ள நேரு சிலையை சேதப்படுத்தப்போவதாக தகவல் பரவியது. இதையடுத்து அந்தப் பகுதியில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, நிலம் எடுப்புத் துறை முதன்மைப் பொது மேலாளர் சிவக்குமார், துணைப் பொதுமேலாளர் சங்கரநாராயணன் ஆகியோர் மாற்றுக் குடியிருப்பு பகுதியில் உள்ள ஏ மற்றும் பி பிளாக் பகுதி மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். அப்போது, அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனராம்.