வெள்ளவாரி ஓடையில் தடுப்புச் சுவர் கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
பண்ருட்டி ஒன்றியத்துக்கு உள்பட்டது விசூர் கிராமம். இங்குள்ள வெள்ளவாரி ஓடையில் கடந்த 2015-ஆம் ஆண்டு காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. இதில் ஓடையின் கரைகள் சேதமடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததில் கடும் சேதங்கள் ஏற்பட்டன. மனித உயிரிழப்புகளும் நிகழ்ந்தன.
இதையடுத்து, வெள்ளவாரி ஓடைக் கரையில் காங்கிரீட் தடுப்புச் சுவர் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து, தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே ஆய்வு செய்தார். அப்போது, கிராம மக்கள் தடுப்புச் சுவர் பணி மந்த கதியில் நடப்பதாக குற்றம் சாட்டினர்.
இதையடுத்து, பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். பண்ருட்டி வட்டாட்சியர் விஜய்ஆனந்த் உடனிருந்தார்.