புதிய கட்டடத்தில் திட்டக்குடி பேரூராட்சி அலுவலகம்: தினமணி செய்தி எதிரொலி
தினமணி செய்தி எதிரொலியால், திட்டக்குடி பேரூராட்சி அலுவலக புதிய கட்டடம் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது.
திட்டக்குடி பேரூராட்சி அலுவலகம் சார்-பதிவாளர் அலுவலகம் அருகே செயல்பட்டு வந்தது. இந்தக் கட்டடம் மிகவும் பழைமை வாய்ந்ததாக இருந்ததால் மழைக் காலங்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டது. மேலும், போதிய இடவசதி இல்லாத காரணத்தால் புதிய கட்டடம் கட்டப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திட்டக்குடி பேருந்து நிலையம் அருகில் புதிய பேரூராட்சி அலுவலக கட்டடம் கட்டப்பட்டது. ஆனாலும் இந்தக் கட்டடம் திறக்கப்படாததால் சமூக விரோதிகளின் கூடாரமானது. எனவே, புதிய கட்டடத்தை திறக்க வேண்டுமென பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன. இதுகுறித்து கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி தினமணியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த நிலையில், திட்டக்குடி பேரூராட்சி அலுவலகம், புதிய கட்டடத்துக்கு வியாழக்கிழமை மாற்றம் செய்யப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.
முன்னதாக, கட்டடத்தில் உடைந்திருந்த ஜன்னல் கண்ணாடிகள் சீரமைக்கப்பட்டு, கட்டடத்துக்கு புதிய வண்ணம் பூசப்பட்டது.