மணல் கடத்தல் தொடர்பாக 15 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திட்டக்குடியை அடுத்துள்ளது செம்பேரி கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் உரிய அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டு வருவதாக அப்பகுதியினர் அடிக்கடி புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து மணல் கடத்தலை தடுக்க வேண்டுமென பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் உரிய அனுமதியில்லாமல் வெள்ளாற்றில் மாட்டு வண்டிகள் மூலமாக மணல் அள்ளப்பட்டு வருவதாக அப்பகுதியினர் பெண்ணாடம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர்,ஆற்றுக்குள் மணல் அள்ளிக் கொண்டிருந்த 15 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், மாட்டு வண்டியின் உரிமையாளரிடமும் விசாரணை செய்து வருகின்றனர்.