போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்த விளக்க வாயில் கூட்டம்
அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்கள் சார்பில் கடலூரில் வேலைநிறுத்த விளக்க வாயில்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
போக்குவரத்துத் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த ரூ.5,500 கோடியை உடனே வழங்க வேண்டும். ஓய்வூதிய பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். ஊதிய பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களை வஞ்சிக்கக் கூடாது. ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் சங்கங்கள் தயாராகி வருகின்றன. இதனை முன்னிட்டு, வேலைநிறுத்தப் போராட்டத்தை விளக்கும் வகையில் கடலூரில் உள்ள மண்டல போக்குவரத்து பணிமனை முன் வியாழக்கிழமை அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் வாயிற் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தொமுச தலைவர் பி.பழனிவேல் தலைமை வகித்தார்.
தொழிற்சங்க நிர்வாகிகள் தங்க.ஆனந்தன் (தொமுச), ஜி.பாஸ்கரன் (சிஐடியூ), இரா.மணிமாறன் (எம்எல்எப்), எஸ்.கருணாநிதி (ஏஎல்எல்எப்), இரா.வீரமணி (பிடிஎஸ்), டி.ஆர்.தண்டபாணி (டிஎம்டிஎஸ்பி) உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக டி.ஜெய்சங்கர் (பிடிஎஸ்) வரவேற்க, பி.கண்ணன் (சிஐடியூ) நன்றி கூறினார்.