பண்ருட்டி நகரில் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் குப்பைக் கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
பண்ருட்டி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் சுமார் 85 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். நகரில் நாள்தோறும் சுமார் 22 டன் குப்பை வெளியேற்றப்படுகிறது.
இதை மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து உரம் தயாரிக்கும் வகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பண்ருட்டி நகராட்சியில் துப்புரவுப் பணியாளர்கள் சுமார் 150 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 5-இல் ஒரு பகுதியினர் அலுவலக தூய்மைப் பணிகளில் ஈடுபடும் நிலையில், எஞ்சிய பணியாளர்கள் மட்டுமே நகரில் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நகரில் தேங்கும் குப்பைக் கழிவுகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் முழுமையாக அகற்றப்படாமல் ஆங்காங்கே குப்பைகள் தேங்கிக் கிடப்பது தொடர்வதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
குறிப்பாக, மேலப்பாளையம், டிஎஸ்பி அலுவலகம் செல்லும் வழி, மேலப்பாளையம் நடுநிலைப் பள்ளி அருகே, தண்டுப்பாளையம் காலனி, நேதாஜி நகர், பஞ்சவர்ணம் நகர், எழில்நகர் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைக் கழிவுகள் சரிவர அகற்றப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பொதுமக்கள் குப்பைகளை திறந்த வெளியில் கொட்டாமல் இருக்க நகராட்சி நிர்வாகத்தினர் தேவையான இடங்களில் குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும். பொது இடங்களில் பொறுப்பற்ற முறையில் குப்பைகளை வீசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்ருட்டி பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் அருகே பிரதான சாலையில் தேங்கும் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. எனவே, முறையாக குப்பைகளை அகற்றி நகரை தூய்மையாக பராமரிக்க நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.