நெகிழிப் பொருள்கள் மீதான தடையை அமல்படுத்த கூடுதல் அவகாசம் அளிப்பது தொடர்பாக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வனிடம் வணிகர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கடலூர் மண்டலத் தலைவர் டி.சண்முகம், செயலர் வி.வீரப்பன் ஆகியோர் (படம்) அளித்த மனு: தமிழக அரசு 1.1.2019 முதல் நெகிழிப் பொருள்களுக்கான தடை உத்தரவை அமல்படுத்த ஆயத்தமாகி வருகிறது. நெகிழிப் பொருள்களால் நிலத்தடி நீர், மண்வளம் பாதிக்கப்படுவதை அறிவோம்.
இருப்பினும், கடைகளில் இருப்பில் உள்ள பொருள்களை மட்டும் விற்பனை செய்துகொள்ள கால அவகாசம் தேவைப்படுவதால், தடை உத்தரவை அமல்படுத்துவதற்கான தேதியை தள்ளிவைக்க அரசிடம் பரிந்துரைக்க வேண்டும். பால், எண்ணெய் பாக்கெட்டுகளுக்கு அரசு அனுமதி அளிப்பதுபோல, மளிகை, உணவுப் பொருள்களை பைகளில் கட்டித் தர அனுமதிக்க வேண்டும்.
வெளி மாநிலங்களில் இருந்து உணவுப் பொருள்கள், ஜவுளி வகைகள் நெகிழிப் பைகளில் வருவதை தவிர்க்க முடியாத நிலையில், அவைகளுக்கு அரசு அபராதம் விதிக்கக் கூடாது என்று அந்த
மனுவில் கோரியுள்ளனர்.