நடுக் கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் சக மீனவர்களால் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனர்.
கடலூர் அருகே உள்ள தாழங்குடா மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வடிவேல் (30), விமல் (30), விஜய் (28), கருணாகரன் (25), வில்லத்தான் (28). இவர்கள் ஐந்து பேரும் வெள்ளிக்கிழமை மீன் பிடிப்பதற்காக பைபர் படகில் கடலுக்குள் சென்றனர்.
கடலின் சீற்றம் சற்று அதிகமாக இருந்த போதிலும் படகைச் செலுத்தி கடலுக்குள் சென்றதாகத் தெரிகிறது. அப்போது, வேகமாக வீசிய அலையால் படகின் ஒரு பகுதியில் ஓட்டை விழுந்தது. அதன் வழியாக தண்ணீர் படகுக்குள் புகுந்தது.
இதனால் படகைச் செலுத்த முடியாமலும், கரைக்குத் திரும்ப முடியாமலும் மீனவர்கள் தவித்தனர். பின்னர், இதுகுறித்து செல்லிடப்பேசி மூலமாக தாழங்குடாவைச் சேர்ந்த சக மீனவர்களுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, இரு படகுகளில் விரைந்து சென்ற மீனவர்கள், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஐவரையும் பத்திரமாக மீட்டனர்.