நெய்வேலியில் பள்ளி உடற்கல்வி ஆசிரியரை கொன்று கெடிலம் ஆற்றில் புதைத்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், நெய்வேலி, 10-ஆவது வட்டத்தைச் சேர்ந்த ஏழுமலையின் மகன் சதீஷ்குமார் (27). இவர், 9-ஆவது வட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், கடந்த 9-ஆம் தேதி பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சதீஷ்குமாரின் தந்தை ஏழுமலை நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணையில், சதீஷ்குமாருக்கும், அதே பள்ளியில் பணியாற்றி வந்த பண்ருட்டி ஒன்றியம், கீழக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கும் (24) தகாத உறவு இருந்து வந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக, அந்த ஆசிரியையின் கணவர் ஞானப்பிரகாசத்திடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், தனது மனைவியுடனான உறவைத் தவிர்க்கும்படி பலமுறை கூறியும் கேட்காததால், நண்பர்களுடன் சேர்ந்து சதீஷ்குமாரை கொன்று, பண்ருட்டி அருகே உள்ள ஏரிப்பாளையம் கெடிலம் ஆற்றில் புதைத்ததாக ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.
இதையடுத்து, சனிக்கிழமை காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் வெங்கடேசன் (நெய்வேலி), சுந்தரவடிவேலு (பண்ருட்டி), காவல் ஆய்வாளர்கள், பண்ருட்டி வட்டாட்சியர் விஜய்ஆனந்த் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு, ஆற்றில் புதைக்கப்பட்ட சதீஷ்குமாரின் சடலத்தைத் தோண்டி எடுத்து, புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், சதீஷ்குமாரின் சடலம் அவரது தந்தை ஏழுமலையிடம் ஒப்படைக்கப்பட்டது.
சதீஷ்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய ஞானப்பிரகாசத்தின் நண்பர்களான நெய்வேலி, 21-ஆவது வட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரஞ்சித் (31), பிரபாகரன் மகன் சபரீஷ் (32), 28-ஆவது வட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சேட்டு ஆகியோரை போலீஸார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.