மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகளின் லட்சிய முன்னேற்ற சங்கத் தலைவர் சி.கே.சந்தோஷ், பொதுச் செயலர் பொன்.சண்முகம், பொருளாளர் ஆர்.தட்சிணாமூர்த்தி ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:
இரு கால்களும் முடியாத மாற்றுத் திறனாளிகள் அன்றாடம் பயன்படுத்தும் 3 சக்கர சைக்கிள்கள் கடந்த இரு ஆண்டுகளாக வழங்கப்படுவதில்லை.
இதனால், மாற்றுத் திறனாளிகள் தொழில் செய்ய சென்று வரமுடியவில்லை.
கடலூர் மாவட்டத்தில் கால் முடியாதவர்கள் அதிகமானோர் உள்ளதால் அவர்களுக்கு உடனடியாக 3 சக்கர சைக்கிள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை உதவித்தொகை வழங்கிட அரசு வெளியிட்டுள்ள ஆணையை செயல்படுத்த வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை ரூ.ஆயிரத்தை, 80 சதவீதத்துக்கு மேல் ஊனம் உள்ளவர்களுக்கு ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டது.