மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
கடலூர் மாவட்டம் பெரியகொமட்டியைச் சேர்ந்தவர் க.ரமேஷ் (40). தொழிலாளியான இவர், கடந்த 2014 -ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து பரங்கிப்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கடலூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி லிங்கேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், ரமேஷின் குற்றம் உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் 2 ஆண்டுகள் கூடுதலாக சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் தீர்ப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, ரமேஷ் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.