இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளில் அரசு தலையிடக் கூடாது: இந்து மக்கள் கட்சி
இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளில், தமிழக அரசு தலையிடக் கூடாது என இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம.ரவிக்குமார் கூறினார்.
தமிழ்நாட்டில் கோயில்களில் விளக்கு ஏற்றுவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி, இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் மாநில பொதுச் செயலர் ராம.ரவிக்குமார் தலைமையில் நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை சிதம்பரம் நடராஜர் கோயிலில், விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
பின்னர் ராம.ரவிக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறை பக்தர்களின் வழிபாட்டு உரிமையில் தலையிடுகிறது. பக்தர்கள் உணர்வு ரீதியாக பிரார்த்தனை செய்ய அந்தந்த சந்நிதிகளில் விளக்கேற்றி வழிபடுவது மரபு. இதை தடுக்கக் கூடாது. தேவையற்ற கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்.
சிதம்பரம் நகராட்சிக்கு கடந்த 15 ஆண்டுகளாக ஆணையாளர் நியமிக்கப்படவில்லை. உடனடியாக ஆணையரை நியமிக்க வேண்டும். சிதம்பரம் புதை சாக்கடை திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார் அவர். மாநிலச் செயலர் சுவாமிநாதன், மாவட்டத் தலைவர் பரணிதரன், உ.வெங்கடேச தீட்சிதர், நிர்வாகிகள் சொக்கலிங்கம், ராமலிங்கம், நாராயணசாமி ஆகியோர் உடனிருந்தனர்.