கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே அரசுப் பேருந்து படிக்கட்டிலிருந்து தவறி விழுந்த மாணவி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
நெல்லிக்குப்பம் அருகே உள்ள பலப்பட்டு காலனியைச் சேர்ந்த அல்லிமுத்து மகள் தனலட்சுமி (16). சி.என்.பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் செல்வதற்காக அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் முன் படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த தனலட்சுமி, திடீரென தவறி கீழே விழுந்தார். இதில், பேருந்தின் பின்புற சக்கரம் அவர் மீது ஏறியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த நடுவீரப்பட்டு போலீஸார் மாணவியின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.