பண்ருட்டி அருகே முதியவரை ஏமாற்றி வீடுபுகுந்து ரூ.ஒரு லட்சம் திருடியவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பண்ருட்டி ஒன்றியம், மேலிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (70). இவரது பேரன் கலைச்செல்வன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 11-ஆம் தேதி ரங்கநாதன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அங்குவந்த மர்ம நபர், "உங்களது பேரன் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பியுள்ளார். அதை எடுக்க உங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டையை கொடுங்கள்' எனக் கேட்டாராம்.
இதை நம்பிய ரங்கநாதன், வீட்டுக்குள் சென்று குடும்ப அட்டையை தேடியுள்ளார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வீட்டுக்குள் வந்த மர்ம நபர், அங்கிருந்த பெட்டியை திறந்து அதிலிருந்த ஆதார் அட்டை மற்றும் ரூ.1,06,500 ரொக்கப் பணத்தை திருடிக்கொண்டு பின்னர் வருவதாகக் கூறிச் சென்று விட்டாராம். சிறிது நேரத்துக்கு பிறகு ரங்கநாதன் அந்தப் பெட்டியை பார்த்தபோதுதான் பணம் திருடுபோனது தெரிய வந்ததாம்.
இதுகுறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.