காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ள குழுவினர் வியாழக்கிழமை நெய்வேலி வந்தடைந்தனர்.
முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளை இந்துக்களின் புனித ஸ்தலமாக அறிவிக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், மதுக் கடைகளை தடை செய்ய வேண்டும், ஆலயங்களில் கட்டண தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 22 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7-ஆம் தேதி பழனியில் இருந்து சென்னை ஆளுநர் மாளிகையை நோக்கி நடை பயணத்தை தொடங்கினர். கையெழுத்து இயக்கமும் நடத்தி வருகின்றனர்.
இந்தக் குழுவினர் வியாழக்கிழமை காலை வடலூர் வந்தடைந்தனர். வள்ளலார் சபையில் கையெழுத்து இயக்கம் நடத்தினர். பின்னர், மாலையில் அங்கிருந்து புறப்பட்டு நெய்வேலி, பண்ருட்டி வழியாக சென்னையை நோக்கிப் புறப்பட்டனர். இவர்கள் ஜூன் 1-ஆம் தேதி சென்னையில் ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக அமைப்பின் நிறுவனர் ஆதிமதனகோபால் தெரிவித்தார். இவருடன், தொண்டரணிச் செயலர் ஜி.எஸ்.ராஜூ, அய்யப்பன் உள்ளிட்டோர் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.