விருத்தாசலம் அருகே குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் அருகே உள்ள புதுகூரைப்பேட்டை கிராமத்தில் சுமார் ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியினரின் குடிநீர் தேவைக்காக 4 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 ஆழ்துளை கிணறுகளின் மின்மோட்டார்கள் பழுதானதாம். இதனை சரிசெய்ய பலமுறை வலியுறுத்தியும் இதுவரை சரிசெய்யப்படவில்லையாம். இதனால், அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குச் சென்று குடிநீர் பிடித்து வரும் நிலையில் பொதுமக்கள் உள்ளனராம். மேலும், அந்தப் பகுதியினருக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்கப்படுவதில்லையாம். இதனைக் கண்டித்து வியாழக்கிழமை விருத்தாசலம்-கடலூர் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமார், விருத்தாசலம் காவல் ஆய்வாளர் ராஜதாமரைப்பாண்டியன் உள்ளிட்டோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், 100 நாள் வேலை முறையாக வழங்கப்படுமெனவும், குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படுமெனவும் தெரிவித்தனர். இதனையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.