பருவமழை தொடங்கியுள்ள நிலையில், என்எல்சி இந்தியா நிறுவனம் நெய்வேலி நகரியப் பகுதிகளில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
நெய்வேலி நகரியம் முழுவதும் கொசு தடுப்புப் பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று, கொசு உற்பத்தியைத் தடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தப் பணிக்காக 20 பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், வீடு, வீடாகச் சென்று கொசுப் புழுக்களை கண்டறிந்து அழிப்பதுடன், தேவைப்படும் இடங்களில் கொசு மருந்து தெளிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதேபோல், நகரியப் பகுதியில் இருந்து தினந்தோறும் 8 லாரிகளில் குப்பைகள் அகற்றப்படுகின்றன.
நெய்வேலி நகரிய பொதுமக்கள், பள்ளி மாணவர்களிடம் டெங்கு, பன்றிக் காய்ச்சல் நோய் குறித்து துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் சுகாதார ஆய்வாளர்கள் நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பள்ளிகள், அலுவலக வளாகங்கள், தொழிலகப் பகுதிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் நிலவேம்புக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு
வருகிறது. இதன்மூலம் இதுவரை சுமார் ஒரு லட்சம் பேர் பயன்பெற்றுள்ளதாக என்எல்சி நிர்வாக தரப்பில் தெரிவித்துள்ளனர். என்எல்சி பொது மருத்துவமனை மூலம் மருத்துவ முகாம் தினமும் நடத்தப்பட்டு
வருகிறது.